உங்க செல்போனைக் கொடுங்க, ஒரே ஒரு போன் பண்ணிட்டுத் தர்றேன். ஓர் உயிர் பறித்த இரவல் தொலைபேசி..

17/06/2012 05:20

 

உங்க செல்போனைக் கொடுங்க, ஒரே ஒரு போன் பண்ணிட்டுத் தர்றேன். ஓர் உயிர் பறித்த இரவல் தொலைபேசி..

 

ங்க செல்போனைக் கொடுங்க, ஒரே ஒரு போன் பண்ணிட்டுத் தர்றேன்’ என்று தெரிந்தவர்கள் கேட்டாலும், இனி நிறையவே யோசிக்கத்தான் வேண்டும். ஏனென்றால், செல்போனை இரண்டு நிமிடங்கள் இரவல் கொடுத்ததால் ஓர் உயிர் பறிபோய் இருக்கிறது! 

திண்டுக்கல் மாவட்டம் செம் பட்டிக்கு அருகே செல்லாயி புரத்தைச் சேர்ந்தவர் ராஜா. மில் தொழிலாளியான இவருக்குத் திருமணமாகி 10 மாதங்கள்தான் ஆகின்றன. மனைவியும் அதே மில்லில் வேலை செய்கிறார்.

சில நாட்களுக்கு முன், கலிக்கம்பட்டியில் ஒரு வீட்டில் நகை, பணம், மொபைல் போன் திருடு போய் இருந்தது. அந்த வழக்கை தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா விசாரித்து வந்தார். இந்த நிலையில் திருடுபோன போனில் ராஜாவின் சிம் கார்டு பொருத்தப்பட்டதை ஐ.எம்.இ.ஐ. எண் மூலமாகத் தெரிந்துகொண்ட எஸ்.ஐ., கடந்த 6-ம் தேதி மாலை ராஜாவையும் அவரது அண்ணன் அன்புச்செல்வனையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அன்று இரவே ராஜா இறந்து போனதுதான் பெரிய விவகாரமாக உருவெடுத்துள்ளது.

ராஜாவின் அண்ணன் அன்புச்செல்வனிடம் பேசிய போது . ''அன்றைக்குச் சாயங்காலம் திண்டுக்கல்ல வேலை செஞ்சிட்டு இருந்த என்னைத் தேடி,போலீஸ்காரங்க ஜீப்புல வந்தாங்க. 'உன் தம்பி எங்கடா?’னு கேட்டாங்க. 'ஏன் சார் தம்பியைக் கேக்குறீங்க?’னு கேட்டேன். 'அவன் செல்லுல இருந்து ஒரு மெசேஜ் போயிருக்கு. அதைப்பத்தி விசாரிக்கணும்’னு சொன்னாங்க.

உடனே தம்பி வேலை பார்க்கும் மில்லுக்கு அவங்களைக் கூட்டிட்டுப் போனேன். தம்பியைக் கூட்டிக்கிட்டு வண்டியில ஏறுனாங்க. வேனுக்குள்ள ஏத்தின மறுநிமிஷத்துல இருந்து கண்ணுமண்ணு தெரியாம அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. நான் கழுத்தில் போட்டிருந்த ஒரு செயினையும் வாங்கிக்கிட்டு, திண்டுக்கல் ஸ்டேஷனுக்குள்ள என் தம்பியை மட்டும் கொண்டு போனாங்க. நான் வெளியே நின்னுட்டு இருந்தேன்.

அவன் அடி தாங்க முடியாம அலறுன சத்தம் வெளியே வரைக்கும் கேட்டுக்கிட்டே இருந்துச்சு. நைட் 10 மணி வரைக்கும் சத்தம் கேட்டுச்சு. அவன் தண்ணி கேட்டுக் கதறியும் யாரும் கொடுக்கலை.

போலீஸ் விசாரிச்சப்போ, 'ஃப்ரெண்ட்ஸ் என் செல்போனை வாங்கி னாங்க. என் சிம் கார்டை எடுத்து அவங்க செல்போன்ல போட்டு செக் பண்ணிப் பார்த்தாங்க’னு தம்பி சொல்லி இருக்கான். வாங்கினவங்க பேரையும் சொல்லி இருக்கான். உடனே அவங்களை விசாரிக்கிறதுக்காக என்னைக்கூட்டிக்கிட்டு எங்க ஊருக்கு வந்தாங்க. அவங்க தேடி வந்த ஆளுங்க இல்லைன்னதும், என்னை மட்டும் ஊரில் விட்டுட்டுப் போனாங்க.

ராத்திரி ரெண்டு மணிக்கு எங்க ஊரு வக்கீல் வந்து சொல்லித்தான், என் தம்பி செத்துப்போனது எங்களுக்குத் தெரியும். 'நடந்தது நடந்துபோச்சு... இதைப் பெருசு பண்ணாதீங்க. நாலு லட்ச ரூபா பணம் தர்றோம்’னு செம் பட்டி ஸ்டேஷன்ல வெச்சு ஒரு போலீஸ் அதிகாரி  விலை பேசினார்.

அவங்க தப்பு செய்யலைன்னா காசு கொடுக்கிறேன்னு எதுக்காக சார் சொல்லணும்? அநியாயமா அப்பாவி ஒருத்தனை அடிச்சே கொன்னுட்டாங்க. அவன் திருடன் இல்லை சார், இதுவரை அவன் மேல எந்த கேஸும் இல்லை'' என்றபடி அடக்க முடியாமல் அழுதார்.

இந்த விவகாரம் குறித்து எஸ்.ஐ. ரமேஷ் கண்ணா. ''நகை திருடுபோன இடத்தில் காணாமல்போன செல்போன் ஐ.எம்.இ.ஐ. நம்பரைக் கவனித்த நேரத்தில், அந்த செல்போனில் ஒரு சிம் கார்டைப் போட்டு செல்லை ஆன் பண்ணிப் பாத் துட்டு, உடனே ஆஃப் பண்ணிட்டாங்க.

அந்த எண்ணை வைத்துத்தான் ராஜாவை விசாரணைக்காக அழைத்து வந்தோம். அவனுடைய கூட்டாளிகள் வேடசந்தூரில் இருப்பதாகச் சொல்லவே அங்கே ராஜாவை அழைத்துப்  போனோம். அங்கே போனதும் இறங்கி ஓடப்பார்த்தான். துரத்திப் பிடித்தோம். கொஞ்ச நேரத்தில் அவனுக்குக் கை, கால் நடுங்க ஆரம்பித்தது, அதன் பிறகு இறந்து விட்டான். அதிகப் பதற்றம் காரணமாக ஹார்ட் அட்டாக் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். ராஜாவை அடித்துக் கொன்றோம் என்று சொல்வது உண்மை இல்லை. கையில் கிடைத்த சாட்சியை யாராவது அடித்துக் கொல்ல நினைப்பார்களா? தலைமறைவாக இருக்கும் அவனுடைய கூட்டாளிகளைப் பிடித்தவுடன் பல உண்மைகள் வெளிவரும்'' என்றார்.

ராஜாவுக்கு திடீரென ஹார்ட் அட்டாக் வரும் அளவுக்கு உடல் நிலை மோசமாக இருந்ததா என்று அவரது மனைவி மகேஸ்வரியிடம் பேசிய போது . ''அவர் உடம்புக்கு ஒரு பிரச்னையும் இல்லீங்க, எந்த நோயும் கிடையாது. எந்த வம்புதும்புக்கும் போக மாட்டார். செம்பட்டி ஸ்டேஷனுக்கு நாங்க கிளம்பினப்பதான், அவரு செத்துட்டாருன்னு தகவல் சொல்றாங்க. அவர் நெஞ்சு வலி வந்து சாகுறதுக்கு வழியே இல்லீங்க'' என்றார் கண்களில் நீர் வழிய.

இது தொடர்பாக திண்டுக்கல் எஸ்.பி. ஜெயச்சந்திரனிடம் பேசிய போது . ''இந்த பிரச்னை தொடர்பாகக் குற்றவியல் நடுவர் விசாரணை நடக்கிறது. போஸ்ட் மார்ட்டத்தை வீடியோ பண்ணி யிருக்காங்க. விசாரணையின் முடிவில்தான் இறப்புக்கான காரணம் தெரியவரும்'' என்றார்.

உயிரின் மதிப்பு காவல் துறைக்கு எப்போதுதான் புரியுமோ?