ஒலிம்பிக்கில் 22 பதக்கங்களுடன் ஓய்வு பெற்றார் சாதனை நாயகன் பெல்ப்ஸ்

06/08/2012 09:27

 

ஒலிம்பிக்கில் 22 பதக்கங்களுடன் ஓய்வு பெற்றார் சாதனை நாயகன் பெல்ப்ஸ்
 
ஒலிம்பிக் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 22 பதக்கங்களை பெற்று உலக சாதனை படைத்த அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

சர்வதேச அளவிலான நீச்சல் போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ள அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ், லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும் தனது சாதனைகளைத் தொடர்ந்தார்.

இது அவருக்கு 3 வது ஒலிம்பிக் போட்டியாகும். இதற்கு முந்தைய 2 ஒலிம்பிக் போட்டிகளில் அவர் 16 பதக்கங்களைப் பெற்றிருந்தார். தற்போதைய லண்டன் போட்டியில் மேலும் 6 பதக்கங்களை வென்று புதிய ஒலிம்பிக் சாதனை படைத்து விட்டார்.

ரஷ்யாவை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான லெட்டினா, அதிகபட்சமாக 9 தங்கம் உட்பட 18 பதக்கங்களை வென்றிருந்ததே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது.

கடந்த 1956 முதல் 1964ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட 3 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு நிகழ்த்தப்பட்ட லெட்டினாவின் சாதனையை, நீண்ட காலத்திற்குப் பிறகு மைக்கேல் பெல்ப்ஸ் முறியடித்தார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற 4*100 மீற்றர் மெட்லி நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட மைக்கேல் பெல்ப்ஸ் 18வது தங்கப்பதக்கம் வென்றார். இந்தப் போட்டியுடன் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

பெல்ப்ஸ் 18 தங்கப்பதக்கம் உட்பட 22 பதக்கங்களை வென்று உலகின் அதிகபட்ச பதக்கங்கள் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இது குறித்து மைக்கேல் பெல்ப்ஸ் கூறியதாவது, தனி வீரர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை யாரும் எட்ட முடியாத சாதனை படிகளை கடந்திருப்பது பெருமையாக உள்ளது.

ஆனால் இந்த சாதனையை எட்ட நான் கடினமான பாதைகளை கடந்து வந்துள்ளேன் என்றார். இந்த ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெற தீர்மானித்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார்.