எகிப்தில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் கூடியது: அதிர்ச்சியில் இராணுவம்
எகிப்தில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் கூடியது: அதிர்ச்சியில் இராணுவம் |
எகிப்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி கலைக்கப்பட்ட நாடாளுமன்றம், புதிய ஜனாதிபதி முகமது முர்சியின் உத்தரவுப் படி நேற்று கூடியது.
எகிப்தின் ஜனாதிபதியாக 30 ஆண்டுகளாக ஆட்சி செய்த முபாரக், பொது மக்களின் தொடர் போராட்டம் காரணமாக கடந்தாண்டு பதவி விலகினார். அதன் பின் அமைக்கப்பட்ட இடைக்கால அரசை இராணுவ உயர்மட்ட கவுன்சில் கவனித்து வந்தது. இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. தெரிவு செய்யப்பட்ட மூன்றில் ஒரு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறைகேடாக வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததால், இராணுவ அரசின் தலைமையில் அமைந்த நீதிமன்றம் கடந்த மாதம் நாடாளுமன்றத்தை கலைக்க உத்தரவிட்டது. இதனிடையே புதிய ஜனாதிபதி முகமது முர்சி, தேர்தல் நடக்கும் வரை கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இராணுவ உயர் அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். “நாடாளுமன்றத்தை கலைக்க நாங்கள் இட்ட உத்தரவுதான் இறுதியானது” என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். எனினும் நீதிமன்ற உத்தரவை மீறி, எகிப்து நாடாளுமன்றம் நேற்று மீண்டும் கூடியது. நாடாளுமன்ற சபாநாயகர் சாத் இ கதாத்னி, சபையை சிறிது நேரம் நடத்தினார். ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் சபைக்கு வந்திருந்தனர். விடுதலை கட்சி மற்றும் இடதுசாரி கட்சி உறுப்பினர்கள், இந்த கூட்டத் தொடரை புறக்கணித்தனர். ஜனாதிபதி முர்சி அரசியலமைப்புக்கு எதிரான புரட்சியை மேற்கொள்வதாக இவர்கள் குற்றம் சாட்டினர்.
|